"ஸ்ருதி"யின் மரணம்: புதிய சட்ட வரைமுறை தயாரிக்க கோர்ட் உத்தரவு!


ANTHAPPAARVAI

சென்னை | தாம்பரம் | முடிச்சூர்: பஸ்சில் சென்ற பள்ளிக் குழந்தை ஓட்டை வழியாக விழுந்த இறந்த சம்பவம் தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தானாக தலையிட்டு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக எதிர்காலத்தில் நடவாமல் தடுக்க புதிய சட்ட திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக ஒரு சட்ட வரைவு மாதிரியை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க பள்ளி கல்வி துறை செயலர் சபீதா, போக்குவரத்து துறை செயலர் கார்த்திகேயன், மெட்ரிக்., பள்ளி இயக்குனர் செந்தமிழ்செல்வி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆஜராகினர்.

இன்றைய விசாரணை தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கைது மட்டும் போதாது. இந்த வழக்கை கொலை வழக்காக ஏன் மாற்றக்கூடாது என நீதிபதிகள் கடும் ஆவேசமுற்றனர். வரும் காலத்தில் இது போன்று நடவாமல் தடுக்க புதிய சட்ட திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வரைவு திட்டத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதில் மாற்றம் அல்லது யோசனைகள் குறித்து கோர்ட் தெரிவிக்கும் என்றனர். அரசு வக்கீல்கள் விரைவில் இதற்கான வழிமுறைகள் செய்வதாக கோர்ட்டில் உறுதி அளித்தனர். தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே, நேற்று முன்தினம் பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி (7) உடல் நசுங்கி பலியானாள். காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் அனிஷ் சாப்ரா மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவி ஸ்ருதி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு, சிறுமி உடல், வரதராஜபுரம், புருஷோத்தமன் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ருதி பலியான வழக்கு தொடர்பாக, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் தினகர் விசாரணை நடத்திய பின், பஸ் டிரைவர் சீமான், சீயோன் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் விஜயன், பஸ் கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மீது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டியது; வாகனத்தை ஓட்டினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும், அந்த வாகனத்தை ஓட்டியது; பழுதடைந்த வாகனம் என்று தெரிந்தும், அதை ஓட்டி உயிருக்கு பங்கம் விளைவித்தது போன்ற குற்றங்கள் செய்ததாக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

அவசர கூட்டம்:
ஐகோர்ட் உத்தரவையடுத்து, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், போக்குவரத்துத் துறைச் செயலர், கமிஷனர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயலர், முதன்மை கல்வி அதிகாரி, போலீஸ் சார்பில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சிறுமி ஸ்ருதி உயிரிழப்புக்கு காரணமான சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நேற்று மாலை, "நோட்டீஸ்' அனுப்பியது.

"நோட்டீஸ்' விவரம்:
குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த தவறியது ஏன் என கேட்டு, மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் பதிலைப் பெற்றதும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆனால், அலுவலகம் திறந்திருந்தது. தாம்பரம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி முடிச்சூரில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விபத்துக்குள்ளான பேருந்து, கடந்த 9ம் தேதி, தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,) பெற வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்தை சோதனை செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஆர்.டி.ஓ., சஸ்பெண்ட்:
எனவே, பழுதான பேருந்துக்கு சான்று வழங்கிய விவகாரத்தில், ஆர்.டி.ஓ., படப்பச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஆர்.டி.ஓ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு: சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
பத்திரிகைகளில் வந்த செய்தியில், சாலையில் இந்த பஸ் செல்வதற்கு தகுதியானது என, 15 நாட்களுக்கு முன் தான் ஆர்.டி.ஓ., ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. நாங்களாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். பள்ளி அதிகாரிகள், போக்குவரத்து கமிஷனர் மற்றும் சாலையில் செல்வதற்கு இந்த பஸ் தகுதியானது என சான்றிதழ் அளித்த போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர், நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அட்வகேட்-ஜெனரல் தொடர்பு கொண்டு, கோர்ட்டில் அவர்கள் ஆஜராக கேட்டுக் கொள்ள வேண்டும். என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பள்ளி பேருந்துகளை பராமரிக்க புதிய விதிமுறைகளை வகுக்கவும், தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!