சின்னச் சின்ன சந்தத்தில்
உன் விழிகள் சிந்திய ராகத்தை
என் இதயத்தின்
வீணை நரம்புகளில் வடித்தெடுத்து
காதல் பூவனத்தில்
உலாவ விட்டிருந்தேன்….
அது காற்றில் கலந்து
மூங்கிலை உரசிச் சென்ற போது
இசையாக மாறி
தென்றலாக வெளி வந்ததது..!
அந்தத் தென்றல்
உன்னை உரசிய போது
ஏற்பட்ட காதல் மயக்கத்தில்
இந்த உலகமெல்லாம் சுற்றி
அலைந்து திரிகின்றது...
நான் என்ன சொல்வேன்
என் உள்ளம் தவிக்கின்றது…
இரவின் ஒளியில்
மல்லிகையின் இதழ்களில்
தேங்கிய பனி மழையில்
நனைத்தெடுத்த எனது நினைவுகளை
கொள்ளையிட்டுச் சென்ற
அந்த பூந்தேன்றல் காற்று
என்னிடம் எப்போது திரும்பும்?
உன்னோடு பேசிக்கொண்டிருந்த
அந்த சில மணித்துளிகளில்
ஏதேதோ உணர்வுகள்
என் மனதில் தோன்றி மறைந்தன
அவற்றை எல்லாம்
உனக்குப் பிரியும் வகையில்
ஒரே வார்த்தையில் மொழி பெயர்த்து
சொல்ல எனக்குத் தெரியவில்லை.
ஒரு வேளை…
ஒரு வேளை… இது தான் காதலா?
நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
என் இதயம் உன்னை நொடிப்பொழுதில்
தொட்டு விடும்…
என்னுள் நீ…!!